நஞ்சு யார்? நம்பி கெட்டது யார்? - தூ. சடகோபன்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் ‘ஜனநாயகம் என்பது மக்கள் அரசுமுறை என்பதோடு முடிந்துவிடவில்லை. புதுவாழ்விற்கான நல் அழைப்பும் அது. பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரி சமமாகப் பங்கிட்டுக்கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக்கூடமும் அதுவே! ஒவ்வொரு மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோளை அடைந்திடச் செயலாற்றிட வைத்திடும் பெருநோக்கம் கொண்டதே ஜனநாயகம் எனப்படுவது’ என்று அரிய பல சிந்தனைகளை அதில் அடக்கியுள்ளார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவராக, தமிழினத்தின் தலைவராக, தி.மு.க.வின் நிரந்தரத் தலைவராக, ஆட்சியின் தலைவராக தன்னை ஆக்கிக் கொண்ட கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவின் ஜனநாயகம் புலப்படாது. என்னவெனில் ‘பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக் கூடம் ஜனநாயகம்’ என்று அண்ணா அளித்த விளக்கம், கலைக்கூடம் என்பதையும் அதன் உட்பொருளையும் தன் குடும்பக் கூடம் என்பதாகப் புரிந்துள்ளது.

அண்ணாவின், கழகத்தின் உண்மைத் தம்பிகளுக்கு புரிந்ததெல்லாம் ‘ஒவ்வொரு’ மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோள்’ என்பது தான்.



இதுதான் கழகம் என்னும் தி.மு.க. குடும்பத்தில் நிலைத்திருக்கும் என்று நம்பியதுதான் குற்றம். அந்த நம்பிக்கையை நஞ்சாக்கியது யார்? எண்ணற்ற கழக முன்னணித் தலைவர்களை வெளியாக்கியது யார்? அறிவாலயத்தில் மின்தூக்கிக் கூடுக்குள் தலைவர் போகும்போது அவர்மீது ஓர் தூசும் விழாது பார்த்திருந்து விழித்திருந்த மாசற்ற மனிதனாய் இன்று உயர்ந்து நிற்கும் வைகோ அவர்களை வெளியேற்றியது யார்? எல்லாம் கலைஞர் கருணாநிதியே!இன்றுவரை ‘மைனாரிட்டி’ என்றே எதிர் கட்சிகளால் அழைக்கப்படும் ஆட்சியும் பலமானதாக இல்லை. தி.மு.க.வும் பலமானதாக இல்லை. எல்லாம் தானே! தன் குடும்பமே! தம்மக்களே என்ற நிலை கட்சியிலும் ஆட்சியிலும் நிலையானபோது அண்ணாவின் ஜனநாயகம் நிலையாமல் போனது. கழகங்கள் பலவாகிவிட்டன. திராவிட இயக்கம், கொள்கைகள் சிதறிப் போயின.
செம்மொழி மாநாட்டையொட்டி ‘திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்னும் கலைஞர் கருணாநிதிக்கு திராவிட இயக்கங்கள் உடைவதற்குத் தாமே காரணம் என்பது மறந்து போயிற்று.

அறிஞர் அண்ணாவின் தம்பி என்றும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் என்றும் கூறிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவின் நாகரிகம் மட்டும் மறந்து போயிற்று. செம்மொழி மாநாட்டுக்கு வாருங்கள் என்று உடன்பிறப்புக்கு எழுதும் மடலில் ஓர் வரியைப் பாருங்கள்.
‘எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறதா? ஏதோ ஒரு விலங்கின் ‘காம்போதி’ என்பார்களே! அந்தக் காம்போதிதான் கேட்கிறது’ கழுதைக்கு ஒப்பிட்டு ஓர் கட்சியின் தலைவரை, ஆட்சிக்குத் தலைமையாய் இருந்தவரை இழிவுபடுத்துவதை எண்ணிப்பாருங்கள். சகிக்கமுடியாத சொல் அல்லவா இது. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை;கும் மணமுண்டு’ என்ற அண்ணாவின் இதயம் இப்படி எழுதுமா? ஆட்சி மன்றத்தில் அண்ணா முதலமைச்சராக இருந்து ஆற்றிய உரையையும் பாருங்கள். ‘இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் பலன் கிடைக்கவில்லை. ஆகையால் மாற்றம் வேண்டும் என்று அண்ணாதுரை பேசுகிறானே, இவனுக்குத் திருமணம் ஆகி வருஷங்கள் இருபது ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஒரு குழந்தை கூடப்பிறக்கவில்லை. அப்படியானால் அவன் மனைவி ராணிக்கு வேறு ஒரு கணவனைத் தேடலாமா? என்று கூறும்போது அண்ணா கண்களில் கண்ணீர் தளும்ப சற்று பேச்சினை நிறுத்திவிட்டு ‘சகித்துக்கொண்டிருந்தேனே’ என்று அண்ணா கூறியது சகிப்புத்தன்மைக்கே உச்சம்.

மனித மனத்துக்கே அடித்தளமான நாகரிகம். இந்த நாகரிகத்தை கலைஞர் கருணாநிதியிடம் பார்க்கமுடியாது.
செம்மொழி மாநாடு, தமிழுக்கு மாநாடு! நடத்துவது கலைஞர் கருணாநிதியானாலும் அரசு மாநாடு. தமிழ்நாட்டரசு மாநாடு. மாண்புகள் காக்கப்பட வேண்டிய மாநாடு. உலகத் தமிழரெல்லாம் உற்று நோக்கும் மாநாடு. ஊலகமொழி அறிஞர்கள் ஆய்வாளர்கள் பார்வைக்குண்டான மாநாடு. அதற்கு அழைப்பதில் அநாகரிகச் சொல். தொல் நாகரிகத்தைப் பண்பாட்டை கொல்லும் சொல். இனிய தமிழ்ச் சுளைகளை கலைஞர் கருணாநிதியா கொடுக்கப் போகிறார்?
நெஞ்சில் நஞ்சு
எண்ணு தமிழ் நாடே
நம்பிக் கெடாதே!

தூ. சடகோபன்
மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்,
புதுச்சேரி.

Read more...

விழுப்புரம் ரயில் தண்டவாளம் தகர்ப்பு… அரசின் குற்றப்பின்னணி....


12-ம் தேதி விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. தகவல் கிடைத்து முன்கூட்டியே ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அது குறித்து தகவல் வெளியிட்ட மாநில காவல் துறை தலைவர் லத்திகாசரன் அவர்கள் 'இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மாவோயிச தீவிரவாதிகள் காரணம் அல்ல' என்று அறிவித்தார். அதாவது விடுதலை புலிகள் ஆதரவு இயக்கங்கள்தான் என்பதை கோடு போட்டு கொடுத்தார். வழக்கு உடனடியாக கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து பேசிய மாநில உளவு பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் 'விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்கள்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்தியிருக்கும்' என்றார். அதாவது 1991-ம் ஆண்டு மே 21-ம் நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையான போது, அது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகூட தொடங்கப்படாத நிலையில், அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசுவாமி 'ராஜீவ் படுகொலைக்கு விடுதலை புலிகள்தான் காரணம்' என்று அன்றைய சில மணி நேரங்களிலேயே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அதே பாணியில் இன்று உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் முனைப்பு காட்டுகிறார்.
விசாரனை தொடங்கப்படாத நிலையில் எப்படி 'புலிகளின் ஆதரவாளர்கள்' என்கிறார் என பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கான 'விளக்கம்' இப்போது கிடைத்திருக்கிறது. விழுப்புரத்தில் உள்ள ஈழ ஆதரவு இயக்க இளைஞர்கள் எட்டு பேர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே ரகசியமாக கடத்தி சென்று தடுத்து வைத்து 'விசாரித்து' வருகிறார்கள். அதாவது சம்பவம் நடந்த அடுத்த நாளே அந்த இளைஞர்களை கடத்தி சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கிறது போலீஸ். அதை வைத்துதான். உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் அப்படி 'கருத்து' கூறினார். இந்த
நிலையில் 14-ம் தேதி திங்கள் அன்று விழுப்புரத்திற்கு சென்ற ஜாபர்சேட் 'வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம்' என்று பேட்டி அளித்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு 'இதுதான். இப்படித்தான்' என்று செயல்படுத்துகிறார்கள். சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோதி நரசிம்மன், எழில் இளங்கோ, தமிழ்வேங்கை, பாபு, ஏழுமலை, கணேஷ், ஜெயராமன், குமார் ஆகிய எட்டு நபர்கள் ஈழ ஆதரவு இயக்கத்தில் செயலாற்றி வருகிறார்கள். கைதுக்கு வேறு பின்னணியும் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி தன்னைத்தானே எரித்து உயிர் கொடையளித்த முத்துகமார், சிவகுமாரன் உள்ளிட்ட 19 பேருக்கான முதலாம் ஆண்டு வீர அஞ்சலி பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். அந்த கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக புலமைபித்தன், திருச்சி வேலுசாமி ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசியில் புலவர் புலமைபித்தன் அவர்கள் கலந்துகொள்ளவில. நேரில் கலந்துகொண்ட வேலுச்சாமி திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக சாடியிருந்தார். அதைவிட அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அந்த இளைஞர்கள் கருணாநிதியை தாக்கி, மத்திய மாநில அரசுகளை மிகவும் கடுமையாக கேலிசெய்து நாடகம் போட்டிருந்ததுதான். அவர்களின் கேலிக்கை நாடகம்தான் அனைவரையும் பரபரப்பாக பேச வைத்தது. அந்த நாடகம் திமுக-காங்கிரஸாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே அந்த இளைஞர்கள் குறிவைக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல இளைஞர்களின் இந்தவித வீராவேசமான எழுச்சி தமிழகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருந்தது. ஆளும் கட்சியினருக்கு பெரும் எரிச்சல். நிலைமையை இப்படியே விட்டால் எதிர்கால தமிழகம் இந்த இளைஞர்களின் பிரச்சார
வளையத்திற்குள் சென்றுவிடும் என்று அஞ்சி திட்டமிட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த குண்டு வெடிப்பு நாடகம். நினைத்தபடி இப்போது இளைஞர்கள் மீது கைவைக்க தொடங்கிவிட்டார்கள். இப்படி கைது செய்வதன் மூலம் மற்ற இளஞைர்களுக்கு ஒருவித அச்சத்தை எற்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களின் ஈழ ஆதரவு சிந்தனையை, பிரச்சாரத்தை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய திட்டம். அதை நிறைவேற்றுகிறார்கள். அதற்கு ரயில் தண்டவாள தகர்ப்பு ஏன்? குண்டு வெடிப்பு ஏன்? வேறு ஏதாவது பொய் வழக்கு போடலாமே?... இதில்தான் விஷமம் இருக்கிறது. மற்ற வழக்குகளை போல் அல்ல குண்டு வெடிப்பு வழக்கு. போலீஸ் எப்படி வேண்டுமானாலும் இதில் விளையாடலாம். கைது செய்யும் இளைஞர்களை ஜாமீனில் விடுவதற்கு ஏதாவது
காரணத்தை சொல்லி தாமத்தபடுத்தலாம். இப்படி செய்வதால் மற்ற இளைஞர்களுக்கு அச்சத்தை எற்படுத்த முடியும் என்பதுதான் பின்னணி. ஆக, முதல்வர் கருணாநிதையை கடுமையாக விமர்சித்ததற்கு பழி தீர்த்த மாதிரியும் ஆயிற்று,மற்ற இளைஞர் எழுச்சிகளை தடுத்த விதமாவும் ஆயிற்று என்பதுதான் திட்டத்தின் மையம். பிரதான இன்னொரு காரணம் ஈழ விடுதலை ஆதரவு எழுச்சியை உடனடியாக தடுக்க வேண்டும். அது கைது நடவடிக்கைகள் மூலமாக மட்டும் போதாது. புலிகளின் ஆதரவாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் 'வன்முறையாளர்கள்' 'பயங்கரவாதிகள்'.! தமிழக மக்கள் உயிர்களை பலிவாங்க முனைபவர்கள்.! எங்கோ நடக்கும் ஈழ பிரச்சனைக்கு இங்கே உயிர்பலி செய்வது என்ன நியாயம் என்ற கருத்தை வெகுஜன மக்கள் மத்தியில் பேச வைப்பதுதான்.
பிரச்சாரப்படுத்துவதுதான். அப்படி பிரச்சாரப்படுத்த காங்கிரஸ்-திமுக ஊடகங்களும், அரசு இயந்திரங்களும் தயாராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு, புலிகளின் ஆதரவு என்றாலே 'அது சார்ந்த இயக்கம், இளைஞர்கள் எல்லாம் பயங்கரவாதத்தை செய்பவர்கள்' என்ற முத்திரையை குத்துவதான பின்னணிதான் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 'சுற்றுகிறது'! ஈழ மண்ணில் கொத்து குண்டுகளால் தமிழர்கள் கொத்து கொத்தாக, குவியல் குவியலாகவே செத்தார்கள்.

தமிழகத்தில் பெரும் கதறல் ஏற்பட்டது. போராட்டம் வெடித்தது. அப்போதுகூட எந்த இளைஞனும். இயக்கமும் இப்படியான பயங்கரவாத வேலைகளை செய்யவில்லை.
சிவகுமாரன் முத்துகுமாரைப்போல் தன்னுயிரைத்தான் மாய்த்துகொண்டார்கள். முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதுகூட அரசு அடக்குமுறையை ஏவியது. கல்லூரி விடுதிகளை நல்லிரவில் முடி அந்த இளைஞர்களை வீதிக்கு கொண்டு வந்தது. போராட்டத்தற்கு பிறகு அந்த நேரத்திற்கு இல்லை என்று மறுத்துவிட்டு மீண்டும் கல்லூரிகளை இழுத்து மூடியது. அப்போது யாரும் உணர்ச்சிவசப்பட்டுகூட 'இப்படியான குண்டுவெடிப்பு பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை என்பதை மட்டுமல்ல... இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

தீவிரவாதத்தை கண்காணிக்கும் மாநில கியூ பிரிவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்த நிறுத்தவே பாடுபடும் உளவு பிரிவு போலீஸம் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவ்வளவு தூரம் இறக்கை கட்டி பறப்பதேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு தனி ரயிலயே ஒருவன் கடத்தி சென்றான். ஓட்டிச் சென்ற ரயில் அனைத்து சிக்னல்களையும் மீறி சென்று வியாசர்பாடி ரயில் நிறுத்தத்தில் பெரும் விபத்தோடு கவிழ்ந்தது. நான்கு பேர் அதில் உயிர் இழந்தார்கள். அந்த நேரம் எதிரே எந்த ரயிலும் வரவில்லை. வந்திருந்தால் 'மோதல்' மூலம் மேலும் பெரும்
உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும். அந்த சம்பவத்திற்கு நேரில் சென்றாரா உளவுத்துறை அதிகாரி. ஏதாவது உடனடி கருத்தை சொன்னாரா? ஏன்? ஏனென்றால், வியாசர்பாடி விபத்து எதேச்சையாக நடந்தது. அதாவது நடத்தியவன் திட்டமிட்டபடி நடந்தது. அதனால் அதில் என்ன எப்படி முடிவெடுப்பது என்ற 'தெளிவு' காவல்துறை வீரர்களுக்கு இல்லை. ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு 'சிலரால்' திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடி நேரடியாக 'விளக்க' வந்துள்ளார்கள். இந்த வித்தியாசத்தையும் கவனிக்க வேண்டும். மற்றொரு காரணத்தையும்
பார்க்க வேண்டும். உண்மையில் பெரிய அசம்பாவிதம், விரவாதம் என்று நடக்கும் போதெல்லாம் 'அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை' என்று பூசி மெழுகுவதையேதான் காவல்துறை செய்யும். அதாவது சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடவில்லை. சுமூகமாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவே முனைப்பு காட்டும். ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்தினால் எரிச்சல்படும் போலீஸ். ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரெதிராக உள்ளது. மாநில அரசு, காவல்துறை கட்டமைப்பு வரிந்துகட்டிகொண்டு 'ஆமாம், குண்டு வெடிச்சதுததான். இது புலி ஆதரவாளர்கள்தான்' என்று கூப்பாடு போடுவதிலிருந்தே 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று வலிந்து போய் சொல்லும் கதையை நினைவு படுத்துகிறது. முதர்வர் கருணாநிதியின் 'வாழ்நாள் கனவான' உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நேரத்தில், உண்மையிலே
குண்டு வெடிப்பு நடந்திருந்தால் உளவுத்துறை ஐ.ஜி. பர்சேட்டின் டவுசரை கழட்டியிருப்பார் கருணாநிதி. மாநாட்டிற்கு யார் எந்த நம்பிக்கையில் வருவார்கள். எந்த நம்பிக்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறி கோவைக்கு வருவார்கள் என்று தறியிருப்பார். ஆக இந்த நேரத்தில் 'நாடு நன்றாக இருக்கிறது' என்றே காட்ட முனைவார்கள். அப்படியிருக்க 'குண்டு வெடித்து. அது புலிகளின் ஆதரவு அமைப்புதான் செய்தது' என்று சொல்கிறார்கள் என்றால் என்ன பொருள். அவர்கள் திட்டமிட்டது என்று அர்த்தம். உண்மையில் ஈழ ஆதரவாளர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று மக்கள் நம்புவார்கள். அதனால் கோவை செம்மொழி மாநாட்டுக்கு எந்த சிக்கலும் வந்துவிடாது என்று அரசே 'தெளிவு'கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். மூன்று நாட்களாக சட்டவிரோத தடுப்பில் வைத்து ரகசிய சாரணைக்குள்ளாகியிருக்கும் எட்டு இளைஞர்களின் தரப்பாக நீதிமன்றத்தை நாடும் வழக்கறிஞர் கண்ணனிடம் பேசியபோது... ''அந்த எட்டு நபர்களையும் எப்போது எங்கே கைது செய்து அழைத்து சென்றார்கள் என்று தெரியாது. சிலரை வீட்டில் இருந்து
அழைத்து சென்றிருக்கிறார்கள். மற்றபடி எங்கே வைத்துள்ளார்கள். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. அவரவர் வீட்டாருக்குகூட தெரிவிக்கவில்லை. வழுக்றிஞர் என்ற முறையில் நான் முயற்சி எடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் பயனில்லை. இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் ஈடுபடவில்லை. ஈழ ஆதரவு தரப்பினர் யாருமே ஈடுபடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள் என்பதுதான் வழக்கறிஞர்களின் கருத்து. அப்படி அசம்பாவிதம் செய்வதால் ஈழ ஆதரவாளர்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லை. மக்கள் வெறுப்பார்கள். இழப்புதான். ஆனால் ராஜபக்சேவுக்கும், காங்கிரஸ் தரப்புக்கும் இதில் பெரிய நலன் இருக்கிறது. ஆகவே அவர்கள் செய்திருக்கதான் அதிக வாய்ப்பு. அதுதான் எங்களின் எதிர் புகார்.

குறிப்பாக காங்கரிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலியின் பங்கு இந்த குண்டு வெடிப்பில் இருக்கிறது. அதற்கான ஆதாரம் உள்ளது. உறுதியாக கூறுகின்றோம். சாட்சிகள் மறைக்கப்படும், விசாணை போக்கு மாறிவிடக்கூடும் என்பதால் இப்போது மக்கள் மத்தியில் வெளிப்படையாக சொல்ல முடியாது. சரியான நேரத்தில் அதை அம்பளப்படுத்துவோம். ஆனால் அசன் அலியின் கடந்த காலங்களை பார்த்தாலே தெரியும். அவர் இங்கே ராஜபக்சேவின் ஏஜன்ட்டாகதான் வேலை செய்தார். நான் ராஜபக்சேவின் நண்பர்தான் என்றார். அந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இங்கே பல வேலைகளை செய்தவர்.அப்போது இலங்கை துணை தூதர் அம்சாவுடன் சேர்ந்துகொண்டு பத்திரிகைளார்களை வளைத்து அவர்களுக்கு 'அன்பளிப்பு, நிதியுதவி' என்று ஏற்பாடு செய்து கொடுக்க உதவியாக இருந்தவர். ராஜபக்சேவின் திட்டத்திற்கு ஏற்ப இங்கே முக்கிய அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக காய் நகர்த்தியவர். தமிழக முதல்வரை சந்தித்து ஈழ ஆதரவு போராட்டத்தை நசுக்க மாற்றுவழி திட்டம் இருப்பதாக சொன்னவர். அப்படியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசன் அலி மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதற்கான ஆதாரத்தோடு புகார் கொடுக்கின்றோம். இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து புகார் கொடுக்க இருக்கின்றாம்.'' என்று கூறினார். இந்த பின்னணியை வைத்து பார்க்கும் போது விழுப்புரம் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கு காங்கிரஸின் 'ஆசைகளுக்கு' ஏற்ப நடந்தேறியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நன்றி- அதிர்வு

Read more...

தமிழர்க்கெதிரான அடக்குமுறையை வீழ்த்துவோம்...

தமிழகத்தில் விழுப்புரம் இருப்புப்பாதை தகர்ப்பு விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரும் இராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக, விழுப்புரம் சரக காவல்துறை உயரதிகாரியிடம் சட்டத்தரணிகள் ஐவர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் இருப்புப்பாதையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று வழுக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இராஜபட்சேவுக்கும் அசன் அலிக்குமிடையே உள்ள தொடர்பு நாம் அறிந்ததே...
அடக்குமுறையை ஈழத்தை தொடர்ந்து தமிழகத்திலும் கொண்டுவர முயலும் காங்கிரசை வீழ்த்துவோம்...

Read more...

அயல்வீட்டில் அழுகுரலும் சாம்பல்மேடும் ஆனால், அக்கினி குண்டத்தில் செம்மொழி மாநாடு?

உணர்வாரா கலைஞர்?:
தமிழ் கூறும் நல்லுலகு இதுவரை 8 உலக தமிழர் மாநாட்டினைக் கண்டுள்ளது. உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஆகும் இப்போது அதன் தலைவராக இருப்பவர் ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா.

(International Association of Tamil Reasearch) உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக நவம்பர் மாதம் 2009 ம் ஆண்டு தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி இது மரபுக்கு மாறானது. கடந்த 8 உலகத் தமிழர் மாநாடு நடைபெறும் திகதி மற்றும் இடம் போன்றவற்றை உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகமே அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பல்வேறு தமிழ் தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

இது சம்மந்தமாக பல்வேறுவிதமான வாதபிரதிவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து விட்டு 2011 ம் ஆண்டில் வேண்டுமானால் உலகத் தமிழர் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது இரண்டு மாதக் காலத்தில் தமிழ் அறிஞர்களால் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிக்க போதிய நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் காரணம் யாதெனில் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு 2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கின்றார் இந்த 2 மாதக் காலத்தில் தமிழ் பேராசியர்களாலோ அல்லது அறிஞர்களாலோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆய்வுக் கட்டுரைகளை மாநட்டில் சமர்ப்பிக்கவோ தேவையான கால அவகாசம் இல்லை என்பதால். ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விழா அவசரமாக தேவைப்பட்டது. அதற்கு பல்வேறு சுயலாப காரணங்கள் உண்டு அதனை பார்ப்பதற்கு முதல் உலகத் தமிழ் மாநாட்டின் பின்னனி பற்றியும் அதன் பெருமை பற்றியும் ஒரே கட்டுரையில் ஆழமாக பார்க்க முடியாவிட்டாலும் மேலோட்டமாக இக்கட்டுரை வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. 18-07-1981 ல் தனிநாயகம் அடிகளாருக்கு மாட்சி நயப்பு மலர் வெளியிடப்பட்டது அதில் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் தந்தையும் தாயும் தனிநாயகம் அடிகள் என்கிறார். அதுமட்டுமன்றி கலாநிதி சு. வித்தியானந்தன் அருள்திரு தனிநாயகம் நினைவு மலரில் (பக்கம்44) உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகள் என்கிறார். அத்துடன் கலாநிதி கமில்சுவல்லபில் தனிநாயம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஞானத் தந்தை என்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமானது அரசியல் சார்பு கொண்டதாகவோ வர்த்தக நோக்கம் கொண்டதாகவோ இருக்க கூடாது என தொடகத்திலேயே யாப்பிலே குறிப்பிட்டுவிட்டார்கள. ஸ்தாபகர்கள் இல்லாத காலத்தில் கருணாநிதி போன்றோர் இதனை தமதும் தமது குடும்பத்தினதும் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற தீர்க்க தரிசனம் மிக்க பார்வை இருந்ததாலோ என்னவோ? இதுவரை தமிழகத்தை ஆண்ட எல்லாத் முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியுள்ளனர் தமிழின் காவலன் என் அவரது பக்கவாத்தியங்களால் புகழப்படும் கருணாநிதியைத் தவிர இவ்வாறு சொல்வதானது அவர் மீதான கோபம் என கருதிவிட வேண்டாம்.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கின்றேன் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 16-04-1966 ம் ஆண்டு காலை 10.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள துங்கு அப்துல் ரகுமான் அரங்கிலே மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். முதலாவது மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 132 பேராளர்களும் 40 பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு 150 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாநாட்டிற்குப் பின் அவற்றினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியிட்டனர். அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு 03-01-1968 ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் இந்தியாவின் அன்றைய ஜனாதிபதி கலாநிதி ஜாகீர் உசேன் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். இதில் முன்நாள் முதலைமைச்சர்களான கு. காமராசர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உற்பட அப்போதைய தமிழக எதிர்கட்சியினரும் கலந்துக்கொண்டனர். மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்சில் 15-07-1970 அன்று தொடங்கியது. பாரிஸ்சில் நடைப்பெற்றதால் நிறையப்பேர் கலந்துக்கொள்ளவில்லை எனினும் 39 நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர்கள் அதில் கலந்துக்கொண்டனர் அதில் ஒருவர் கலைஞர் கருணாநிதி.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. யாழில் நடைப்பெற்ற மாநாடு பற்றி சற்று விரிவாக பார்ப்பதன் வாயிலாக சிங்கள பேரினவாத அரசு அந்தக் காலம் தொடக்கம் எவ்வாறு தமிழ் மக்களை அடக்கியாள முற்பட்டிருக்கின்றாhகள்; என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அப்போது இலங்கையில் பிரதமர் ஆட்சியே இருந்தது. அன்றைய பிதமராக திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவி வகித்தார். யாழ் மண்ணில் மாநாட்டை நடத்த சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் அங்கே மாநாட்டினை நடத்தினால் இலங்கைத் தமிழர்களின் மொழித்திறன் நாகரீகம் பண்பாடு போன்றவற்றினை மாநாட்டிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்துக்கொள்வர்கள் என்ற பயம் காரணமாகவும் அரசியல் ரீதியாக தமிழர்கள் பலம் பெறக் கூடும் என்பது போன்ற காரணங்களால் இலங்கை பேரினவாத அரசு இலங்கையில் நடத்த அனுமதியளிக்கவில்லை. இறுதியாக திருமதி. சிறிமாமோவோ பண்டாரநாயக்காவிற்கு அரசியல் நெருக்கடி வராது என உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே பேரினவாத அரசு அனுமதியளித்தது. மாநாட்டிற்கு வருகை தரவிண்ணப்பித்தவர்களில் ஏராளமானோருக்கு வீசா வழங்குவதை இழுத்தடித்த போதும் 20 நாடுகளில் இருந்து 197 பேராளர்கள் கலந்தக்கொண்டனர்.

இலங்கை அரசு சார்பில் ஒருவர் கூட பங்குபற்றவுமில்லை எதுவித உதவியினையும் செய்யவில்லை. நடந்து முடிந்த 8 மாநாட்டிலும் அரச ஆதரவுமின்றி அரச தரப்பின் பங்கு பங்குபற்றலும் இல்லாமல் நடந்த ஓரேயொரு மாநாடு 4வது மாநாடு மட்டுமே தமிழர் ஆராய்ச்சிக் கழகமே தனித்து நின்று நான்காவது மாநாட்டினை நடத்தியது. 03-01-1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அருட்திரு. தனிநாயகம் அடிகள் தொடங்கி வைத்தார் உலகத் தமிழர் மாநாடானது தமிழரசுக்கட்சியின் மாநாடென்றும் அரச எதிப்புச் சக்திகளின் மாநாடு என்றும் அன்றைய அமைச்சராக இருந்த தமிழரான சூரியகுமார் மற்றும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றோர் பிரச்சாரம் செய்தும் கூட யாழ் மண்ணில் உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி களிப்பில் யாழ்நகரையே அலங்கரித்தனர். நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது; நடக்க இருக்கும் விபரீதம் பேரினவாத அரசிற்கும் தமிழர்களாய் பிறந்து அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளையும் தவிர வேறு யாருக்குத் தெரியும்? மாநாடு நடப்பதற்கு எல்லா வழிகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்தியும் அது வெற்றிகரமாக நடந்ததை சகித்துக்கொள்ள முடியாத பேரினவாத அரசின் பணிப்பின் பேரில் அந்தக் கோரச்சம்பவம நடந்தேறியது. மாநாட்டிற்கு வந்தவர்களை வழியனுப்புவதற்கான ஏற்பாடுகள் 10 ம் திகதி செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. இதற்கென அரங்கு பதிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் மைதானத்தின் வாசல் பூட்டப்பட்டிருந்தது.

யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடமிருந்து கடிதம் கொண்டுவந்தால் மட்டுமே வாசலை திறக்க முடியுமென கிளிபிள்ளையைப் போல் காவலாளி பதில் சொல்லி விட்டார். அல்பிரட் துரையப்பாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலையில் இதனால் வீரசிங்கம் மண்டபம் முன்னால் அவசரமாக மேடை ஒன்று அமைக்கப்பட்டது. 50000 மக்கள் கூட்டம் குழுமியிருந்தது பேராசிரியா நெய்னார் முகமது உரையாற்றிக்கொண்டிருந்தார். இரவு 8 மணிக்கு போலிஸ் உதவி அத்தியட்சகர் போலிஸ் பட்டாளத்தோடு வந்து மக்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார். குழப்பம் செய்ய வேண்டாம் அமைதியான முறையிலேயே தாம் கூட்டம் கூட்டுவதாக மக்கள் கேட்ட உடன் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தி மக்கள் மீது தடியடி தாக்குதலை போலீசார் நடத்தியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் கூட்டம் கலைந்தோடியதில் ஏராளமானோர் காயப்பட்டனர். துப்பாக்கி பிரயோகத்த்தால் மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி 7 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர் 2 பேர் நசுங்கிச் செத்தனர். நிராயுதபாணிகளான அப்பாவி பொது மக்களை கொன்றொழித்த காவற் துறை அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது.

மக்களே போலீசாரை தாக்கினர் என திருமதி. சிறிமா பாராளுமன்றத்தல் அறிவித்ததுடன் இறந்தவர்களுக்காக மரியாதை நிமித்தமேனும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஐந்தாவது மாநாடு ஆபிரிக்காவிலே நடாத்த திட்டமிட்டிருந்த போது அன்றைய தமிழக முதலைமைச்சர் எம். ஜி. ஆர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக மாவட்டங்களில் ஒன்றான மதுரையில் 04-01-1981 அன்று அன்றைய தமிழக ஆளுனர் ஜனாப். சாதிக் அலி தொடங்கிவைத்தார். 20 நாடுகளில் இருந்து 800 பேராளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி 5வது மாநாட்டிலே கலந்து கொண்டிருந்தார். தமிழகத்தின் பலம் பொருந்திய முதலமைச்சராக இருந்த எம். ஜி. ஆர் உலகத் தமிழர் மாநாட்டை தமிழத்திலே நடத்தும் படி உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைக் கேட்டாரே தவிர கருணாநிதி செய்தது போல உலகத் தமிழ மாநாடு நடைபெறும் என தன்னிச்சையாக அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆறாவது மாநாடு மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசியாவில் 19-11-1987 அன்று மலேசிய பிரதம மந்திரி மகாதீர் அகமது தொடங்கிவைத்தார். இதில் தமிழ் நாட்டில் இருந்து கலந்து கொள்ள சென்றவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

6வது மாநாட்டிலே 2000 பேராளர்கள் கலந்து கொண்டனர் 250 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 650 பக்கம் கொண்ட விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. எழாவது மாநடு மொரீஷியஸ் தீவின் தலைநகரான லூயிலில் 04-12-1989 அன்று நடைப்பெற்றது. 7வது மாநாட்டில் மொரீஷியஸ் பிரதமர் அனுரூட் ஜெகந்நாத் கலந்து கொண்டார். 28 நாடுகளில் இருந்து 300 பேராளர்கள் கலந்தக் கொண்டனர். 7வது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து 81 கட்டுரைகள் தனித் தனித் நூலாக 8வது மாநாட்டிலே வெளியிடப்பட்டது. எட்டாவது மாநாடு தமிழக நகரங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தல் 01-01-1995 அன்று நடைப்பெற்றது. 8வது மாநாட்டில் அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர் நாராயணன் மற்றும் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆகியோர் கலந்துக் கொண்டார். 8வது மாநாடு தமிழகத்தின் அன்றைய முதலைமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையில் நடந்தது. ஆக மொத்தத்தில் தமிழத்தை ஆண்ட எல்லா முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடாத்தியுள்ளனர் கலைஞர் கருணாநிதியைத் தவிர. இந்த நிலையிலேயே உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி.

கடந்த வருடம் மே மாதம் 18 ம் திகதி வரையும் ஈழத்திலே தமிழர்கள் கொள்ளப்பட்டும் இலட்சசக் கணக்கான மக்கள் புனர்வாழ்வு நிலையம் என்ற பெயரிலே சிறைப்படுத்தியும் வைத்திருக்கும் போது கருணாநிதி வெளியிட்ட தன்னிச்சையான அறிவிப்பானது தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் எல்லோரையும் கோபப்படுத்தியது.

* ஈழத்திலே நடந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் இருந்தும் அதனைச செய்யாது விட்டதுடன் தமிழ் மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, ஆளும் கட்சியாக இருந்துக்கொண்டே மனிதச் சங்கிலி போராட்டம் பதவி விலகல், பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என்ற நீண்ட நாடகத்தின் உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் என்றும் நாடகமாடியதுடன் ஈழத்திலே போர் நிறுத்தப்பட்டுவிட்டது என மிகப் பெரிய பொய்யைச் சொன்னதுடன் அவருக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து சாதாரண தமிழக மக்களை நம்ப வைத்தவர் உலகத் தமிழ் மாநாட்டினை நடாத்த முனைந்ததானது.......?

அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் மட்டுமே நன்மை பயக்குமே தவிர தமிழுக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லையென்ற கருத்துருவாக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே இருக்கின்றது. அவரது அரசியல் மற்றும் பண பலத்தின் மூலம் அவரது செம்மொழி மாநாட்டினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கலாம்.

தமிழையும் தமிழர்களையும் அழிக்க ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்ததுடன் மட்டுமன்றி அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட இத்தாலிய நாட்டை தாயகமாக கொண்ட சோனியாவே தொடங்கியும் வைக்கலாம.; இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராக கூட கலந்;து கொள்ளலாம். இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூட தமிழ் மொழியின் சிறப்பு பற்றி செம்மொழி மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தமிழ் சமூகமே செத்த வீட்டில் இருக்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் கலைஞரின் செமமொழி மாகாநாட்டை விமர்சித்துள்ளது.

* ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய வரலாற்று துரோகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இந்த வரலாற்று துரோகத்தை மறைக்கவும் தனது காலத்திலும் உலகத் தமிழர் மாநாட்டினை தாம் நடத்தியதாக வரலாற்றிலே இடம் பிடிக்கவும் தனது வாரிசு அரசிலுக்கு தமிழ் உலகத்தின் அங்கீகாரத்திற்மே அவசரம் அவசரமாக உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுமென தன்னிச்சையாக அறிவித்தார். அது முடியாது போகவே செமமொழி மாநாட்டினை நடத்துவதென அறிவித்து வேலைகள் மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கின்றார். உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (International Association of Tamil Reasearch) துணைத் தலைவராக இருக்கும் கலாநிதி வா.செ.குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி செமமொழி மாநாட்டை நடத்த முயல்கிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க செயற்படுகிறார்கள். தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி “தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என பி.பி.சி தமிழோசைக்கு பேட்டியளித்திருந்தார். அதன் பின்னர் பங்குபற்ற போவதாக ஊடகங்களுக்கு சொல்லியுள்ளார். செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அவர் எவ்வாறான முடிவை எடுக்கப் போகிறார் எனத் தமிழ் உலகம் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளது.

ஏலவே உலகத் தமிழர் மாநாட்டிற்கு சென்ற பேராசிரியார் கார்த்திகேசு சிவத்தம்பியை பார்வதியம்மாவை போல புலி ஆதரவாளர் என விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டதை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு அறிவுரை கூறும் அருகதை எமக்கு இல்லை. எனினும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தாழ்மையோடும் அதே வேளை உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கலாம் என கருதுகிறேன். கடந்த 30-12-09 அன்று முரசொலி நாளிதழில் செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்வோரின் விபரம் வெளிவந்தது. செம்மொழி மாநாடு நடத்தும் அவர்களுக்கு வெப்சைட் ஈ;-மெயில் தபால் போன்ற சொற்களுக்கு இருக்கும் அழகிய தமிழ் சொற்கள் தெரியாது போலும். அதனை விட்டுவிடுவோம் நாடு தெரியாதோர் 4 பேர் விண்ணப்பித்ததாக இருக்கிறது. எந்த நாடு என்றே தெரியாதவர்களின் விண்ணப்பங்களைக் கூட ஏற்றுக்கொண்டிருக்கின்றார்களா? யாரும் கலந்தக்கொள்ளலாம் எதனையும் எழுதி அனுப்பலாம் என தமிழகம் எங்கும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது ஏ.ஆர் ரகுமானை வைத்து செம்மொழி மாநாட்டிற்கு பாட்டிற்கு இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.

தமிழ் கூறும் நல்லுலகின் பேராளர்களும் மாமேதைகளும் தமிழ் ஆராய்சியாளர்களும் சேர்ந்து நடாத்தும் உலகத் தமிழர் மாநாடு எங்கே?

கருணநிதியின் குடும்பக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் பெயர் ஊர் தெரியாதவர்கள் பங்கு கொள்ளும் செம்மொழி மாநாடு எங்கே?

தமிழகத்தைச் சில தமிழ் கல்வியாளர்களும் ஈழத் தமிழ் ஆதரவாளாகளும் செம்மொழி மாநாட்டை புறக்கனித்துள்ள இவ் வேளையில் உலகெங்குமுள்ள தமிழ் உதிரக்கொடி உறவுகளும் ஈழப் போரில் ஆகுதியாகிப் போன நம் உறவுகளுக்காக புறக்கணிக்க வேண்டும். கருணாநிதி ஈழத் தமிழருக்கு செய்த வரலாற்று துரோகத்தை மறக்காமல் இருப்போம். செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் பாட சில மிகவும் பிரபலமான திரையுலக கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவரது பக்கவாத்தியங்களும் இருக்கின்றார்கள்.

* தமிழகத்தில் செம்மொழி மாநாட்டை புறக்கனிக்கும் தமிழக உறவுகளோடு உலகெங்குமுள்ள உறவுகளே கைகோருங்கள். தான் செய்த வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முற்படும் கருணாநிதிக்கு சாரளம் வீசுகின்றவர்களை புலம்பெயர் நாடுகளில் நடைபெரும் வைபவங்களுக்கு அழைக்காமலிக்க திடசங்கட்பம் பூணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

* வன்னி போர் வெற்றியினைக் கொண்டாட சின்னத் திரையுலகினரை இலங்கை அரசிற்கு ஒழுங்கு செய்து கொடுத்த தன்னை அன்பு அறிவிப்பாளர் என அழைத்துக் கொள்ளும் பி.எச. அப்துல்ஹமீதே செம்மொழி மாநாட்டினை தொகுத்து வழங்க போகிறார். தமிழை வளாப்பதாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதி; மற்றும் அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழால் அவர்களே வளர்கின்றார்கள் என்பதே யதார்த்தமாகும்.

* தமிழகத்தின் மேடைகளில தமிழில் முழங்கி பணம் உழைக்கும் அப்துல் ஹமீத்திடம் ஈழப்போர் பற்றி சின்னத்திரை நடிகர்கள் கேட்டபோது அது ஒரு மூளையில் நடக்கிறது நாம் ஒரு மூளையில் இருக்கின்றோம் என்று சாவசாதரரணமாக பதில் அளித்துள்ளார் இவ்வாறானவாகளையும் செம்மொழி மாநாட்டிலே பங்கெடுப்பவாகளையும் உலகத் தமிழர்கள் ஓரம் கட்டும் படச்சத்தில் இனிவரும் காலங்களில் இவ்வாறான பச்சோந்திகளை தலையெடுக்காமல் தடுக்கமுடியும்.

தென்னாசியவிலிருந்து இளையவன்

Read more...

முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ

சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார்.

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த தியாகிகளுக்கான நினைவுத் தூணுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய க்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசுகையில், இது போன்ற நினைவுத் தூண்கள் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நிறுவப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல. வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத் தூண் அமைக்கப்பட்டதில்லை என்ற வகையில் நினைவுத் தூண் அமைக்கப்படும்.

இங்கு நினைவுத் தூண் மட்டுமல்லாமல் நினைவு மண்டபமும் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மே 17ம் இதன் தேதி திறப்பு விழா நடைபெறும். இதில் தீக்குளித்த 18 பேரின் பெயர், ஓவியங்கள் இடம் பெறும்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தலைமையில் 5வது கட்ட ஈழப்போர் தொடங்கும்போது நாம் துணை நிற்க வேண்டும். அங்கு தமிழ் ஈழம் மலரும் என்றார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.

ஈழ விடுதலை வரலாறு, இந்தியா செய்த துரோகம், உலக நாடுகளின் மெளனம் இவை அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்.

முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத் தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழ வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைக்கு எதிரான அனைத்தையும் நடத்தியது இலங்கை அரசு. ஈழத் தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம், அங்கு நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்.

சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்றார்.

நல்லக்கண்ணு பேசுகையில், 21ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் நடைபெறாத கொடூரமான இனப் படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை செய்த ராஜபக்சேவுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்தது மனிதகுல பிரச்சனை. அதை ஆதரிக்கக்கூடிய எந்த அரசையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்க முடியாது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமையை விட ராஜபக்சே அதிக கொடுமை செய்துள்ளார் என்றார்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP