மாவீரர் நாள் - 2010
விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!
தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் “பூந்தோட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.
“புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்’ என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள “ஈழப் போர்முனையில் புலிகளுடன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அந் நூலில் அவர் மேலும், “போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, “தன்பிரீன் தொடரும் பயணம்’ என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.
தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.
இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.
ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது “விடுதலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், “விடுதலைப்புலிகள்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: “நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.
பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.
தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், “என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்’ என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. “நடுகல்’ வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது
புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!
அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜா டிஸ்மிஸ் - வைகோ
அமைச்சர் ராஜா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று கோபாலபுரத்திற்கு தகவல் வந்ததால்தான் ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளது திமுக மேலிடம் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ராஜா விலகல் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ.ராசா வரலாறு காணாத இமாலய ஊழலில் சிக்கி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.
14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும், ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பேசினார் இந்த அமைச்சர். எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்றும், முதல்வர் கருணாநிதி [^] அறிக்கை வெளியிட்டார்.
அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யாவிடில், டிஸ்மிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கை கோபாலபுரத்துக்கு வந்ததன் விளைவாகத்தான் அமைச்சர் ஆ.ராசா பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அலைவரிசை ஒதுக்கீட்டில், ரூ 1 லட்சத்து 76 ஆயிரத்து 381 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளையே தான் பின்பற்றியதாக, ஆ.ராசா காரணம் சொல்லுகிறார்.
ஆனால், 2001 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே, 2008, 2009 ஆம் ஆண்டுகளில், ஒதுக்கீடு செய்ததன் மர்மம் என்ன? என்ற கேள்வியை பாரதீய ஜனதா கட்சி எழுப்புகிறது.
யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் திடீரென உருவான நிறுவனங்கள் ஆகும். ஒரு அறிவிப்புப் பலகையை மட்டும் ஒரு அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்ட கம்பெனிகளுக்கு, அலைவரிசை உரிமத்தை அமைச்சர் ராசா வழங்கினார்.
அந்த உரிமத்தைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த உரிமத்தை அந்த நிறுவனங்கள் விற்றுக் கொள்ளை அடித்து விட்டன.
இந்த இமாலய ஊழல் குறித்து உச்சநீதிமன்றம் [^] மத்திய அரசு [^] க்கு கண்டனம் தெரிவித்தது. இன்று 15ஆம் தேதி அதுகுறித்த விசாரணை நடப்பதால் மேலும் பலத்த கண்டனம் வரக்கூடும் என்ற பயத்தால் வேறு வழி இன்றி காங்கிரஸ் அரசு ராசாவை பதவியில் இருந்து வெளியேற்றுமாறு தி.மு.க.வுக்கு நிர்பந்தம் தந்தது.
1,76,000 கோடியும், ஆ.ராசா குடும்பத்துக்கே போய்ச் சேர்ந்து இருக்க முடியாது. இந்தக் கொள்ளைப் பணத்தின் உண்மைப் பயனாளிகள் யார்? பங்கு போட்டவர்கள் யார்? என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன. இந்தக் கொள்ளையில் தி.மு.கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குப் பங்கு உண்டு என்பதுதான் உண்மையாக இருக்க முடியும்.
1987ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பிரச்னை நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ததில் தி.மு.க.வுக்கும் பங்கு உண்டு. தி.மு.க. ஊர்வலங்களில் போபர்ஸ் பீரங்கி வடிவ வண்டிகளைக் கொண்டு சென்றதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.
இந்திய வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழலில், தி.மு.க. அமைச்சர் திரட்டிய பணம்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செலவழிக்கப்பட்டது. வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் அந்தப் பணத்தைத்தான் தி.மு.க. வைத்து இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முன்னாள் அமைச்சர் ராசா மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை [^] மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.