சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்: பெ.மணியரசன்

மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக் காவல் பொறுப்பை ஐ.நா. சபை ஏற்கவேண்டும். இல்லையேல் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.



இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2001 இரவுடன் 451 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.

சிங்களக் கடற்படையினர் அப்படகுக்குள் சென்று கம்பி, தடி, கயிறு ஆகியவற்றால் படகில் இருந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராசு திருவன் புலம் ஆகியோரைத் தாக்கியுள்ளனர்.

அத்தாக்குதலில் செல்லப்பன் இறந்தார்.மற்ற மூவர் காயமடைந்தனர். இதற்கு முன்னால் கடந்த ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு 450 தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் கொன்று விட்டனர்.

இன்னொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முருகேசன் அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய நால்வரையும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு, அவர்கள் நால்வரின் உடைகளைக் களைந்து அவற்றைக் கடலில் வீசி விட்டனர்.

பன்னாட்டுக் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க சிங்களப் படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பேரவலம் பல்லாண்டுகளாகத் தொடர்கிறது.காரணம், தமிழக மீனவர்கள் அயல்நாட்டுப் படையினரால் கொல்லப் பட்டாலோ,அவர்களின் மீன்களையும் மீன் பிடி வலைகளையும் கடலில் வீசினாலோ அவர்களை அம்மணப்படுத்தினாலோ அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்புக் கொடுக்க தமிழருக்கென்று இறையாண்மையுள்ள ஓர் அரசு இல்லை.

இந்தியாவுக்குள் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழகத்தின் இயற்கை வளங்களையும் தமிழர்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு மட்டுமே இந்திய அரசு தமிழ்நாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழர்களின் பாதுகாப்புக்கு அது பொறுப்பேற்பதில்லை.

தமிழகத்தில் உள்ள மாநில ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து, தங்களின் பதவி மற்றும் பணப் பசிகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உருப்புடியான, உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதும் கடிதம் எழுதுவதும் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இதுவரை 451 அப்பாவி மீனவர்களை சிங்கள நாட்டுக் கப்பற்படை கொன்று விட்டது. இனியும் இந்த மனித அழிவு நடைபெறாமல் தடுக்க ஐ.நா. சபை தலையிட்டு, தமிழகக் கடலோரக் காவலை அது தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர தமிழக மீனவர்களைக் காக்க வேறு வழி தமிழர்களுக்கு விட்டு வைக்கப்படவில்லை. ஐ.நா சபை உடனடியாக தலையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP